அருவி பெண்கள் வலையமைப்பினால் ஒல்லிக்குளம் கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள்!!


மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பில் காணப்படும் தேவைப்பாடுகள் மிகுந்த கிராமங்களை தேடி பல்வேறுபட்ட உதவித்திட்டங்களையும் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு நகர் பகுதியில் காணப்படும் தேவைப்பாடுகள் மிகுந்த கிராமங்களில் ஒன்றாக திகழும் ஒல்லிக்குளம் கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள் மற்றும் சேவைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் ஒல்லிக்குளம் கிராமத்தில் உள்ள பாடசாலையானது சுகாதாரவசதிகள் அற்று பற்றைகாடாகவும் பாம்பு தொல்லை அதிகமாகவும் காணப்பட்டவருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள மக்களை கொண்டு குறித்த பாடசாலை வளாகம்ம் சுத்தம் செய்யப்பட்டதுடன்  சுத்திகரிப்பு உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 200 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டதுடன் 50 பெண் பிள்ளைகளுக்கான சுகாதார பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கான விழிப்புணர்வும் இதன்போது வழங்கப்பட்டதுடன், இச் செயல்பாடானது அங்குள்ள பெண்களுக்கு மிகவும் சந்தோசத்தினையும் உள ரீதியான ஒரு தைரியத்தினையும் கொடுத்திருந்தது.

இந்நிகழ்வில் அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன், அருவி பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கிராம மட்ட பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவைபாடுடைய கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக பல்வேறுபட்ட சேவைகளை இவ்வலையமைப்பானது மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.