ஸ்ரீ சிவனொளிபாத மலைக்கு செல்வது ஆபத்தானது- நுவரெலியா மாவட்ட செயலாளர்

 


அனுமதியின்றி பருவகாலம்  இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய நாட்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 2022-2023  சிவனொளிபாத மலை பருவகாலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீ பாதஸ்தானதிபதி சப்ரகமு மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்னவின் பணிப்புரைக்கமைய அனுமதியின்றி ஹட்டன் வீதி மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாகவும் சிவனொளிபாத மலைக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் , சிவனொளிபாத மலைக்கு வருகை தரும் போது, ​​ உரிய நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று நல்லதண்ணி மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிவனொளிபாத மலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருவதாலும், அங்கு செல்லும் படிகளில் பாரிய நீரோடை ஓடுவதாலும் ஸ்ரீ சிவனொளிபாத மலைக்கு செல்வது ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.