புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!

 மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையும், குரு முதல்வருமான அருட்பணி ஜி.அலெக்ஸ் றொபட்டின் தலைமையில் இருதயநாதர் ஆலய முன்றலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19, 20) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சகாயபுரம் பங்குத்தந்தை அருட்பணி பிறைனர் செலர்,  மட்டக்களப்பு ஆயரக நிதிப் பொறுப்பாளர் அருட்பணி ஜே.எஸ். மொறாயஸ், மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா  மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜா  மற்றும் அருட்சகோதரி எஸ்.வேஜினியா ஜெயாணி, நற்கருணைப் பணியாளர்களான எஸ்.அன்ரனி, கே.பத்மநாதன், முதன்மை உளவளத்துணையாளரும், ஆசிரியருமான க.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு மலர்கொத்துக்களும் வழங்கி அதிதிகள் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்தோடு பிள்ளைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன், அவர்களின் ஆற்றல்கள், திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல்வேறுபட்ட மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் இடம்பெற்றன.

விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.










க.கிருபாகரன்

(கல்லடி செய்தியாளர்)

23.08.2023