உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!


2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவருவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பரீட்சைகள், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றன.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையால் உயர்தர பரீட்சையை நடத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டதால், இந்த வருடம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி உள்ளிட்ட உயர்கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில், பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.