பின்தங்கிய பாடசாலைகளின் மகளிர் உதைப் பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் சுற்றுப் போட்டி.






மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான உதை பந்தாட்டத்தை ஊக்குவிப்போம் எனும் செயல் திட்டத்திற்கு அமைவாக 4 வலயங்களில்  இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பும் கழகங்களுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வும்  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பெண்கள் உதைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் தற்போது மாகாண மட்டத்தில் சாதனை புரிந்து, தேசிய மட்டத்தில் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த விசேட பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்று போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பின்தங்கிய பிரதேச பாடசாலையான வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு பெண்கள் பாடசாலையின் உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைவாக ஏனைய பாடசாலைகளிலும் உள்ள பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வவுணதீவு, வெல்லாவெளி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து பெண்கள் இந்த சுற்று போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தச் சுற்றுப் போட்டியானது யூலை மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினர், மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கப் பிரதிநிதிகள், பங்குபெறும் பாடசாலைகளின் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சுற்று போட்டியில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும். இரண்டாவதாக வெற்றி கொள்ளும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும். மூன்றாவது அணிக்கு 50,000 ரூபாயும் பரிசில்களாக வழங்க நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக பெண்கள் அணிகள் பங்குபற்றும் முதலாவது உதைப்பந்தாட்ட சுற்று போட்டி இதுவாகும்.

இப்போட்டி நிகழ்வுகளுக்கான பூரண அனுசரனையினை வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.