மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

 


வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் ஜூன் 30 வரையிலான  6 மாத  காலப்பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட 3 பெண்கள் ஒரு ஆண் உட்பட 4 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட  61 ஆண்கள் 14 பெண்கள் உட்பட  79 பேர்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 10 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும், தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை முதலாம் திகதி தொடக்கம் நேற்று 29 ம் திகதி வரையிலான காலப்பகுதில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.  

இதேவேளை, கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை  18 வயதுக்கு உட்பட்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 113 ஆண்களும் 20 பெண்கள் உட்பட ஒருவருடத்தில் 133 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே, கடந்த 2022ம் ஆண்டின் புள்ளி விபரத்தையும் இந்த ஆண்டு 6 மாத புள்ளி விபரத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 6 மாதத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது.