நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்

 


 

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், ஒன்லைன் முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாகவும், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய கூரியர் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.