சகோதரிக்கு திருமண வாழ்க்கையில் கணவனை தங்கை பங்கு கொடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது

 


இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் பிரதேசம் அருகே மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு  திருமண வாழ்க்கையில் தங்கை பங்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி. இவரது தங்கை லலிதா.

சுப்ரியா மாற்று திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் திருமணம் நேற்று நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மாற்று திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா உருக்கமாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா உறுதியாக கூறியுள்ளார்.

பின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்திச் சென்றனர். மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.