மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு மாணவர்களுக்கு சாரணியத்திற்கான ஜனாதிபதி விருது

 



மட்டக்களப்பின் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களும் சிரேஷ்ட சாரணர்களுமான தவேந்திரன் மதுஷிகன் மற்றும் அமலநாதன் கௌஷிகன் ஆகிய இரு மாணவர்களுக்கு சாரணியத்திற்கான அதி உயர் விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.
இவ் ஜனாதிபதி விருதிற்கான சின்னம் சூட்டி, இம்மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (26) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பாடசாலை முதல்வர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இச்சின்னங்களை மாவட்ட சாரண ஆணையாளர் வி. பிரதீபன் மற்றும் பாடசாலை சாரண ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றனர். பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் போது இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
இதன்போது, ஜனாதிபதி விருதுக்கான சின்னம் சூட்டப்பட்ட தவேந்திரன் மதுஷிகன் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவிருப்பதற்காக வாழ்த்து மற்றும் ஆசி வழங்கும் விசேட வைபவமும் பாடசாலை சமூகம், சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
அத்துடன் இவ்வீர தீர செயற்பாட்டிற்காக பாடசாலை, சாரணிய மற்றும் பாடசாலை சாரணியக் கொடிகள் என்பன மதுஷிகனுக்கு கையளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.