கனவில் புத்தபெருமான் தோன்றினார் .

 


கனவில் புத்தபெருமான் தோன்றி தனக்குச் சிலை வைத்து வணங்குமாறு கூறினார். அதனால்தான் சிலையை வைத்தோம் என்று நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் அச்சுவேலி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரசமரத்துக்கு கீழே திடீரென இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

நிலாவரை பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருவதால் குறித்த சிலை வைத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.