டிஜிட்டல் ஹொஸ்பிட்டல்’ அங்குரார்ப்பண நிகழ்வு

 


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் ஹொஸ்பிட்டல்’  அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர்   ஜீ. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் ஊடாக, வெளிநோயாளர் பிரிவின் அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயப்படுத்தி, கடதாசிப் பாவனையை நிறுத்துவதுடன் ‘பார்கோட்’ முறையிலான மருத்துவ அட்டையும் நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.நோயாளி தொடர்பான சகல விவரங்களும் கணினியில் பதிவுசெய்யப்படுவதுடன், அவர்களின் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள், சிகிச்சையின் விவரங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட உள்ளமை சிறப்பம்சமாகும்.

இங்கு, டொக்டர் ஜீ. சுகுணன் கருத்து தெரிவிக்கையில், தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும்  ஏனைய வைத்தியசாலைகளில் 35 வயதுக்கு மேற்பட்ட சாதாரண சுகதேகிகளை, பூரண பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் சுகாதார பதிவேடு கணினி மயப்படுத்துவதுடன் அவர்களைத் தொடர்ச்சியாக அவதானிக்கும் முறைமையும் உலக வங்கியின் அனுசரணையுடன் PSSP எனும் திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்துவதன் மூலமாக துல்லியம், விரைவு, இலாபகரமான வைத்திய சேவையை மக்களுக்கு தம்மால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.