LIFT தொண்டு நிறுவனத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!!







மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தில்  இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படும் வன்முறைத்தீவிரவாத எண்ணங்களைத் தடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு சமூக ஊகங்களின் சரியான பயன்பாடு, ஊடக தர்மம், ஊடக நெறிமுறைகள்  ஊடக சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களைத் தெளிவு படுத்தும் பயிற்சி வகுப்புக்கள், செயலமர்வுகள் என்பன LIFT நிறுவனத்தினால் நடாத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்புகளுக்கான வளவாளர்களாக பணியாற்றும் வாய்ப்பினை  சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவினால்  வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பதிகாரி ஜீவானந்தம் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சமூக மேம்பாட்டில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி (TOT) வழங்கப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்படும் ஊடகவியலாளர்கள் வளவாளர்களாக பயன்படுத்தப்படுவர்.

இதன்மூலம் ஊடகவியலாளர்களின் சமூகப்பணி மேலும் ஒரு படி முன்னேற்றம் அடைவதுடன் 900 இளைஞர் யுவதிகள் ஊடகம் தொடர்பான தெளிவைப் பெறவும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.