மட்டக்களப்பில் அருட்தந்தை வெபர் அடிகளாரின் திருவுருவச்சிலை திறப்பு விழா!!.














அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் உருவச்சிலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜ சரவணபவன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரினால்  சமயப்பணி சமூகப்பணி கல்விப்பணி மற்றும்  விளையாட்டு துறையினை கட்டியெழுப்புவதிலும் அயராது முயற்சி செய்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் மட்டக்களப்பு  மாவட்டத்தின் இளைஞர்களுக்கு குறையாக இருந்த மைதானத்தை  அமைப்பதில் காரணகர்த்தாவாக இருந்ததுடன் தனது  அயராத முயட்சியினால்  சதுப்பு நிலத்தில் வெபர் மைதானத்தை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவில் 20 பெப்ரவரி 1914 பிறந்த அடிகளார் தனது இறுதி மூச்சுவரை மட்டக்களப்பு மண்ணிற்காக பெரும் சேவையாற்றி    1998 ஏப்ரல் 14 திகதி இறைவனடி சேர்ந்தார்.

இவ்வாறு மாவட்டத்திற்கு பல்வேறு துறைசார்ந்து சேவையாற்றிய வெபர் அடிகளாரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப்  பொன்னையா ஆண்டகை ஆகியோர் கலந்துகொண்டு அடிகளாரின் திருவுருவச்சிலையினை திறந்துவைத்துள்ளனர்.

அத்தோடு இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இயேசு சபை மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் அடிகளார்,
பிரதி மாநகர சபை முதல்வர்  க.சத்தியசீலன், மாநகர உதவி ஆணையாளர் உ .சிவராசா,
மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.பிரசந்தன்,
மாநகரசபை உறுப்பினர்கள்
வலய கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், பாடசாலைகளின் அதிபர்கள், புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.