மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னங்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்திச்சேனை கன்னங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய வினாசித்தம்பி தாமோதரம் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன்பிடித்தொழிலினை மேற்கொண்டு தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 16ம் திகதி பிள்ளைகளுடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கடந்த இரு தினங்களாக உறவினர்கள் தேட ஆரம்பித்ததாகவும் பின்னர் பருத்திச்சேனை கன்னங்குடா ஆற்றுப்பகுதியில் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் தேடிச்சென்ற போது ஆற்றுப்பகுதியில் உள்ள கண்ணா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





