அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்களை
இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபா கடன்
செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த நிலுவைத் தொகையை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே,
புற்றுநோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட உயிர் பாதுகாப்பிற்கு
தேவையான 14 வகையான மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சிடம்
கையிருப்பிலுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தவிர, 384 வகையான
அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் 151 வகையான மருந்துப் பொருட்கள்
நாட்டில் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களில் 60 வகையான மருந்துப்
பொருட்கள் அடுத்த வாரமளவில் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.





