தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நீதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
இதன் அங்கமாக கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது அங்கு பிரவேசித்திருந்த, அதிகாரிகள் மற்றும் பயனாளிகளை அச்சுறுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரண் உள்ளிட்ட தரப்பினர் இடையூறை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக பயன்பெறுவதற்காக அங்கு சென்றிருந்த 67 பேருக்கான சேவை கிடைக்காமல் போனதுடன், நடமாடும் சேவையும் இடைநடுவே நிறுத்தப்பட்டது.
இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிட்டதற்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் வினவ உள்ளேன்” என்றார்





