இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலீஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரனைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது..


 

 

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலீஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரனைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இணைப்புச்செயலாளர் யோ.ரொஸ்மன், இளைஞர் ஒருங்கினைப்பாளர் அனோஜன் மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு பொலிஸ் தரப்பினர் சமூகமளிக்காதமையினால் இன்று வழக்குடன் தொடர்புடைய நால்வரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசாரால் புதைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 திகதி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.