ஹிஜாப் அணிய மறுத்ததால் நேர்காணலை ரத்து செய்த ஈரானிய அதிபர் .

 


சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேர்காணலை நடத்தவிருந்த ஊடகவியலாளர் ஹிஜாப் அணிய மறுத்தமையே இதற்குக் காரணம்.

ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த சிஎன்என் பத்திரிகையாளரான கிறிஸ்டியன் அமன்பூர் மற்றும் ஈரான் அதிபர் இடையேயான நேர்காணல் நியூயோர்க் நகரில் நடைபெற இருந்தது.

நேர்காணலின் போது ஈரான் அதிபர் ஊடகவியலாளரை ஹிஜாப் அணியுமாறு கேட்டுக் கொண்டார்,ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, நேர்காணலை இரத்து செய்யஅதிபர் முடிவு செய்தார்.

ஈரானுக்கு வெளியே இதற்கு முன் நடந்த எந்த ஒரு கலந்துரையாடலிலும் ஒரு நாட்டின் அதிபர் தன்னிடம் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்ததில்லை என்று அமன்பூர் கூறுகிறார்.


இதேவேளை ஹிஜாப் சரியாக அணியவில்லை எனத் தெரிவித்து ஈரானிய காவல்துறையினர் கைது செய்த பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து ஈரானில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.