தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று வெளி வந்துள்ளது

 

 


தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று (29) “சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர்.

இதன்படி நாளொன்றுக்கு 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றார்.

இவை தவிர குழந்தையின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளியே சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும் இந்த 9 வருடங்களில் இவர்களுள் 3882 பேரே தண்டனை அனுபவித்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.