மட்டக்களப்பு நாவற்குடாவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுடன் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் J.P.L. கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2026






































இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் “போதையை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் J.P.L. கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (05) நாவற்குடாவில் ஆரம்பமானது.

ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத் தலைவர் சீனித்தம்பி சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஏந்தியவாறு நடைபவனி இடம்பெற்றதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜீவ ஒளி விளையாட்டுக் கழகம் தனது 57ஆவது வருடத்தை நிறைவு செய்யும் நிலையில், உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் கிராமிய விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது. 

2017ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் J.P.L. சுற்றுப்போட்டியின் 6ஆவது பருவம் இம்முறை “போதையை ஒழிப்போம்” என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகியகாலசிகிச்சைமற்றும் புனர்வாழ்வு மத்திய   நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் கலாநிதி ப.தினேஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.