சாதாரண தர (O/L) மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்க துரித நடவடிக்கை

 


2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை (NIC) வழங்கும் பணியை விரைவுபடுத்தி வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் ஜகத் ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மூலம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கமைய பாடசாலை அதிபர்கள் அந்த விண்ணப்பங்களைத் தாமதமின்றி ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் பெறாத வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள், திணைக்களத்தின் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் திணைக்களத்திற்கு தெரிவித்துத் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பரீட்சைகளுக்கு முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என ஆட்பதிவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.