அரசு மருத்துவமனைகளில் இதய நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இந்த ஆண்டுக்குள் மேலும் 16 புதிய ‘கேத் லேப்’ (Cath Lab) வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போது 10 ஆக உள்ள இந்த ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை, புதிய வசதிகளுடன் 26 ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஸ்டென்ட் போன்ற அவசர சிகிச்சைகளுக்காக 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியலை, முதற்கட்டமாக 3 மாதங்களாகவும், புதிய உபகரணங்கள் மூலம் இறுதி இலக்காக ஒரு மாதமாகவும் குறைக்க முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





