வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் திலக் விஸ்வகுலதிலக தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி ரோகினி ஹெட்டியாரச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிகளவிலான பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது.
இவ்வாண்டு நாடு முழுவதும் 2,800 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 321 மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், வெளிநாடுகளில் பல தியாகங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு உழைக்கும் பெற்றோரின் அர்ப்பணிப்பை மாணவர்கள் மதித்து, கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே. ராஜன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



.jpeg)


.jpeg)











.jpeg)









