அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளது- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

 


அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் இலவச சுகாதார சேவையின் மனிதவள வினைத்திறனை  மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சேவை வழங்குதலின் செயல்திறன், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கிலும், மேற்கு மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்காக  சுகாதார உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 627 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.  

இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அதிகமானோரை சேவையில் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதுள்ள வெற்றிட எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஏறத்தாழ 160,000 பேர் ஏற்கனவே பொதுச்சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில், சுகாதாரப் பணியாளர்கள், இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மற்றும் இரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் பெரும்பாலும் அரசியல் தலையீட்டின் அடிப்படையிலேயே நடைபெற்றன.

சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு மிகவும் வெளிப்படையாகத் வெளிப்படும் விடயமாக சுகாதாரப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பைக் குறிப்பிடலாம். தற்போதைய அரசாங்கம் அந்த முறையை முற்றிலுமாக மாற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேர்ப்பு செயன்முறையை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது, இதற்காக, பகிரங்க விளம்பரங்கள் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் சம வாய்ப்புகள் வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தின் மூலமாக பெறப்பட்ட 91,473 விண்ணப்பங்களில், அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் 2,737 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 88,736 தகுதியான விண்ணப்பதாரர்களிலிருந்து இந்த 2,737 விண்ணப்பங்களே முதல் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆட்சேர்ப்பு, அரசியல் தலையீடு இன்றி, தகுதிகள் மற்றும் முறையான பரீட்சை நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அரச சேவையை அரசியல் செல்வாக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் கொள்கைக்கு இது ஒரு நடைமுறைச் சான்றாகக் கருதப்படலாம் என்றார்.