மட்டக்களப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

 






















 
 m.sivakumar 
 
 
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், கடந்த 2026 ஜூலை 09 (வியாழக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.


உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந. பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பு. நவரூபன் குருக்கள் ஆகியோர் தலைமையில் தினமும் பகல் மற்றும் இரவுப் பூஜைகளுடன் 21 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
 மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 கிராம மக்களின் உபயத்தில் தொடர்ச்சியாக ஆலயப் பெருவிழா பூஜைகளும், ஆன்மீகக் கிரியைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானை தரிசித்து வருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்காகத் தாராளமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருவதுடன், நீண்ட கடைத்தெருவும் அமைக்கப்பட்டுள்ளது. இரவுத் திருவிழாக்கள் நள்ளிரவு 12 மணி வரை பக்திப் பெருக்குடன் நடைபெறுகின்றன.

இவ்விழாவினை ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ. தட்சணாமூர்த்தி, செயலாளர் செ. சிறிதரன், பொருளாளர் தா. ஜெயராம் தலைமையிலான நிர்வாக சபையினர் மிக அழகாக வடிவமைத்துச் சிறப்பான முறையில் பரிபாலனம் செய்து வருகின்றனர். மேலும், கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேச சபைத் தவிசாளர் எஸ். கிரேஷகுமாரன் தினமும் ஆலயத்திற்கு விஜயம் செய்து, பக்தர்களுக்கான நலன்புரிப் பணிகளை நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து வருகின்றார்.


கடந்த 09-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ் ஆலய வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஜூலை 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு, ஆலய வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதுடன் இனிதே நிறைவடையவுள்ளது.