இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, TH-57 ‘சீ ரேஞ்சர்’ 10 உலங்கு வானூர்திகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

 


அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, TH-57 ‘சீ ரேஞ்சர்’ வகையைச் சேர்ந்த 10 பல்பணி உலங்கு வானூர்திகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த புதிய உலங்கு வானூர்திகளின் வருகையானது, இலங்கை விமானப்படையின் நீண்டகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அதன் ஒட்டுமொத்த வானூர்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான பங்களிப்பாக அமைந்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள இந்த உலங்கு வானூர்திகள் தற்போது ரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. வரும் சில நாட்களில் இதற்கான அத்தியாவசிய தொழில்நுட்பப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், இவை உத்தியோகபூர்வமாகப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

புதிய வானூர்தி ஓட்டிகளுக்கான மேம்பட்ட பயிற்சிகளை வழங்குதல், திடீர் இயற்கை அனர்த்தங்களின் போது அவசர உதவிகளை வழங்குதல், ஆபத்துக்களில் சிக்குபவர்களைத் தேடிக் கண்டறிந்து மீட்கும் விசேட மனிதாபிமான திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவற்றுக்காக இந்த 'சீ ரேஞ்சர்' உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.