ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரு ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தொழிலாளர் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம், முதலாளிகள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'முத்தரப்பு சபை' ஒன்றின் மூலம் இந்த இரு நிதியங்களையும் ஒரே பொதுவான நிர்வாகத்தின் கீழ் இயக்குவதே இதன் நோக்கமாகும்.
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தில் 25 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இதன் சொத்து மதிப்பு 4.9 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். தற்போது இதன் நிதி முகாமைத்துவம் மற்றும் கொடுப்பனவுகளை மத்திய வங்கியும், உறுப்பினர்களைப் பதிவு செய்தல் மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளை தொழிலாளர் திணைக்களமும் கவனித்து வருகின்றன.
ஊழியர் நம்பிக்கை நிதி 1980ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். ஏற்கனவே ஒரு முத்தரப்பு சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் 30 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதுடன், இதன் சொத்து மதிப்பு 637.5 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.
சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம், முதலாளிகள், ஊழியர்கள் ஆகிய மூத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த நடைமுறையாகும்.
இதற்கமைய, புதிய குழுவின் பரிந்துரைகள் மூலம் இந்த இரு நிதியங்களையும் ஒருங்கிணைப்பதன் வழி, சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஊழியர்களின் நிதிக்கான சட்ட ரீதியான மற்றும் நிதி ரீதியான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





