முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில், ‘செஃபிராக்சைம்’ (Cefuroxime) என்ற வீரியமிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) ஊசி மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்து நிதி மோசடி செய்தமை குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
2021-2022 காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ், வெறும் 20 டாலர் சென்ட்டுகளுக்கு பெற்றிருக்கக்கூடிய ஊசி மருந்து ஒன்றை 70 டாலர் சென்ட்டுகளுக்கு அதிக விலை டெண்டர் சமர்ப்பித்த நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ததன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கடந்த மூன்று வருடங்களாக பலமுறை முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரே, தற்போது இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





