கடைக்குள்ளேயே உரிமையாளர் கொலை; அலறல் சத்தம் கேட்டு ஓடிய மக்களுக்கு அதிர்ச்சி




ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரான 72 வயதுடைய பெண் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (11) காலை சுமார் 6.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மிரிஜ்ஜவில 100 அடி வீதியில் “லீலா ஸ்டோர்ஸ்” என்ற கடையை நடத்தி வந்த மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.

தாக்குதல் இடம்பெற்றபோது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுடன் காணப்பட்ட அவரை உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில், கடையின் பின்புறத்தில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கடைக்குள் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

அவர் உடனடியாக கடைக்குள் சென்று பார்வையிட்டபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்து அவசரமாக வெளியேறி தப்பிச் செல்வதை கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.