மட்டு- துஷாரா
உலக நாடக தினத்தை முன்னிட்டு இலங்கை கிழக்குப்பல்கலைக் கழக நுண்கலைத்துறை நடாத்தும் நாடக விழா எதிர்வரும் 03 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 09:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:00 மணி வரை வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி து.சத்தியஜித் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
மூத்த நாடகக் கலைஞர் புதுவை அன்பன் நாகமுத்து செல்வம், மட்டக்களப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பாடினிகள் குழுவினரும் மாண்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வைபவத்தையடுத்து முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் எழுத்து மற்றும் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள 'போதைத்துரை' என்னும் நாடகமும், பேராசிரியர் சி.ஜெயசங்கரின் ஆற்றுப்படுத்துகையில் உருவாகியுள்ள 'மூத்தம்மாக்களின் பேரர்கள்' என்ற நாடகமும், முதுநிலை விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரனின் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள 'எம்மைப் பிடித்த பிசாசுகள்', 'நல்ல மாப்பிள்ளை', 'மாறும் பாதை' ஆகிய நாடகங்களும், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரனின் நெறியாள்கையில் உருவாகியுள்ள 'பிள்ளை அழுத கண்ணீர்' என்ற சிறுவர் நாடகமும் அளிக்கை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நாடகங்களில் நுண்கலைத்துறையில் கற்கும் சிறப்பு, பொதுக் கற்கை மாணவர்கள் பங்குகொள்கின்றார்கள் என்பதும், நாடக அரங்கத் துறைகளில் ஆர்வமான அனைவரையும் வருக வருக என நுண்கலைத்துறையினர் அழைக்கின்றார்கள்.






