IMF நிறைவேற்றுச் சபை மே 27 இல் கூடுகிறது, இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு .

 

 

 


 

 சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக எதிர்வரும் மே 27ஆம் திகதி கூடவுள்ளது.

இந்த இரு மீளாய்வுகளும் நிறைவேற்றுச் சபையினால் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அடுத்த கட்ட நிதி உதவி விடுவிக்கப்படும்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இந்த மீளாய்வுகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்த நிறைவேற்று சபை கூட்டத்திற்கு முன்னதாக மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்யக்கூடிய விலையிடலை மீள நிலைநிறுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துதல் போன்ற சில முக்கிய முன் நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

இந்த மதிப்பீடு வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், 4 ஆண்டுகால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.