எந்தவொரு சமூக அந்தஸ்தையும் பாராது, தவறு செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும்-ஜனாதிபதி -

 


நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று ஆற்றிய உரையின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

எந்தவொரு சமூக அந்தஸ்தையும் பாராது, தவறு செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும்  ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.

அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் சட்டம் வளைக்கப்படாத ஒரு புதிய கலாசாரத்தை அரசு உருவாக்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் குறித்துப் பேசிய ஜனாதிபதி, "ஏதாவது ஒரு விசாரணையில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது கட்டாயமான நடைமுறையாகும்" என்றார்.

வாக்குமூலம் வழங்குவதை ஒரு பெரும் பேரழிவாகச் சித்தரிக்கும் பழைய கலாசாரம் இனி நாட்டுக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது, தம்மைச் சட்டத்துக்கு மேலானவர்கள் என இதுவரை கருதி வந்தவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் ஜனாதிபதி விமர்சித்தார்.

ஒரு நாகரிகமான நாட்டை உருவாக்க அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்படும் சமூகம் அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகளை மீளாய்வு செய்வதற்காகச் சென்றிருந்த போதே, நாட்டின் நீதித்துறை நடைமுறைகள் குறித்த தனது அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி இவ்வாறு வெளிப்படுத்தினார்