அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்

 


நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் பதிவான நாள் முதல் இது தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்த வழக்கின் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எவ்வித அரசியல் அல்லது வெளித் தரப்பு அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி விசாரணைகள் சுயாதீனமாக நடைபெறுவதை அதிகாரசபை தொடர்ந்து கண்காணிக்கும்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ அல்லது குழப்பமோ அடையத் தேவையில்லை. தேவையற்ற பொதுக் கொந்தளிப்புகள் நீதி வழங்கும் செயல்முறைக்குத் தடையாக அமையக்கூடும் என்பதால், பொதுமக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஒரு விசேட பராமரிப்பு மையத்தில் மிகவும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதையும், அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் பொறுப்புடன் அறியத்தருகிறோம்.

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பைப் பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதுடன், அதனை உறுதிப்படுத்துவது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.