மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் #பலியான சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் கைது .

 

 





வரதன்

 மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக்கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து யாசக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, மட்டக்களப்பு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதான ஆண் பிள்ளையும், 5 வயதான பெண் பிள்ளையும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் குறித்த தந்தையின் அடையாள அட்டையை பரிசீலித்த போது, அது வேறு ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவரது அடையாள அட்டை கடந்த 2023 ஆண்டு காணாமல் போன நிலையில், சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவரது அடையாள அட்டையை தம்முடையது எனக்கூறி, கைதான அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் யாசக மோசடிக்காக பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனைவி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதாக கூறிய விடயமும் போலியானது என்பதுடன் அவரது மனைவி மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தமது மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி பல இடங்களில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் 

இதேவேளை, கைதான சந்தேகநபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும், அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இந்த சந்தேகநபரை நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. '