பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி "சங்கமம் 2026",

 


இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தவுள்ள உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி "சங்கமம் 2026", எதிர்வரும் 2026 ஜூன் 14ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 

இது குறித்த விசேட ஊடகவியலாளர் மாநாடு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை 11) மாலை நடைபெற்றது. 

இதன்போது, இலங்கையின் கலாசாரப் பெருமையை உலக அரங்கில் உயர்த்தவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பிரம்மாண்டமான கின்னஸ் சாதனை முயற்சியை ஏற்பாடு செய்துள்ளன.

தென்னிந்தியாவில் அண்மையில் நடைபெற்ற அயலகத் தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தியா–ஆசியா–இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத் தலைவர் மற்றும் சங்கமம் குளோபல் அகடமி நிர்வாகிகளுடன் பிரதி அமைச்சர் முன்னெடுத்த ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் பயனாகவே இந்த உலகச் சாதனை முயற்சியை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாபெரும் நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைக்கவுள்ளனர். 

இது குறித்து நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் விளக்கமளித்த இந்திய சங்கமம் குளோபல் அகடமி ஸ்தாபகர் கே.தினேஸ்குமார் மற்றும் இலங்கை சங்கமிழ் லியா ஹொலிடேஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமாலி தசனாயக்கா ஆகியோர், இந்தச் சர்வதேச நிகழ்வு 2026 ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாகும் எனத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வானது வெறும் உலகச் சாதனை முயற்சியாக மட்டுமல்லாமல்; கலாசாரம், ஒற்றுமை மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான நீண்டகால நட்புறவை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு பெருமைமிகு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் கலைப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் வலுப்படுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரில் கண்டு களிக்க பொதுமக்களையும் ஊடகங்களையும் அன்புடன் அழைப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.