ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
விஜயத்தின் முதற்கட்டமாக மே 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி, பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட”(முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மே 22ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, நிந்தவூர் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளார்.
அத்துடன், அம்பாறை நகரில் அமையவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் அவர் இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக, அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.





