உகந்தமலை முருகனாலயத்தில் மே 19 இல் பாலஸ்தாபனம்! இவ்வருடம் கொடியேற்றம், திருவிழா,தீர்த்தம் இல்லை !!








 கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ
முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது.

ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள் மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இம்முறை நடைபெறமாட்டாது என்று ஆலய வண்ணக்கர் எம்டி. சுதுநிலமே
திசாநாயக்க(சுதா)  தெரிவித்தார்.

எனினும், கதிர்காமத்தோடு ஒத்த ஆடிவேல் விழா உற்சவ காலத்தில்(15-29) பாலஸ்தாபனம் செய்த கூடத்தில் சாதாரண பூஜைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாலஸ்தாபனம்!

இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எனவே ஆகம விதிப்படி 12 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற விதி முறைகளுக்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 முதல் 12.00 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபன குடமுழுக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

 உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இப் பாலஸ்தாபனம் இடம்பெறும்.

முதல் நாள் 18ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் இடம்பெறும்.

 (வி.ரி.சகாதேவராஜா)