வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கே.பி.என்.டி.என். தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் அதற்கான இயந்திரங்களை ஏற்கனவே நிறுவியுள்ளது.

 தற்போது இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏல மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர் மட்டக் கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஐந்து வருட காலத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.2026 ஜனவரி 20 அன்று இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு, 2026 மார்ச் 10 அன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, கையெழுத்திடப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால், திட்டமிட்டபடி வரும் ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.