
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விசேட பிரார்த்தனைகள் இன்று (19.04.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அனைத்துக் கத்தோலிக்கர்களும் தமது குடும்பங்களில் விசேட வழிபாடுகளை நடத்தி, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், உண்மையும் நீதியும் விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டியும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அதற்கமைய காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில் அனைத்துத் தேவாலயங்களிலும் ஒருமுறை மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு காலை 8:47க்கு மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு காலை 8:50க்கு விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் உதவி ஆயர் அன்டன் ரஞ்சித் ஆகியோரின் தலைமையில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெறவுள்ளன.




