செங்கலடிப்பகுதியில் மின்
வெட்டுக்காரணமாக யானைத்தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் நாடாளுமன்ற சபையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற
மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய
போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் மின்சாரத்
தட்டுப்பாட்டால் விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும்
முடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு உடனடியாக உர மானியம் மற்றும் எரிபொருள்
நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாணவன் திருக்குமரன் (கணிதம்)
மற்றும் காத்தான்குடி மாணவன் பர்தான் (வணிகம்) அகில இலங்கை ரீதியில்
முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எரிபொருள் மற்றும் உரத்தைப் பதுக்கி வைத்து இலாபம் ஈட்டும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சாரத் தடையால் கிராமப்புறங்களில்
இருள் சூழ்ந்துள்ள நிலையில், யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
செங்கலடி உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான
விசாரணைகளில் சஹ்ரான் காசிம் ஒரு கருவி மட்டுமே. அவரை இயக்கிய 'முதலாம்
மட்ட' சூத்திரதாரிகள் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நாவற்குடா உள்ளிட்ட பகுதிகளில்
போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளமை குறித்து பாதுகாப்பு அமைச்சிடம்
முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





