தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு
கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய
ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி
ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரூத்ன அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனுமதியுடன், மதுபான
விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும்
விடுதிகள் உள்ளிட்ட உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் இந்த 2 நாட்களும்
மதுபான விற்பனை இடைநிறுத்தப்படும்.
விடுமுறை காலப்பகுதியில் மதுவரி
சட்டங்களை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமதாரர்களுக்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம்
எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது
கடத்தல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு
தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும்.
பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான
விநியோகத்தைக் கட்டுப்படுத்த காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட
நாடளாவிய ரீதியில் விசேட மதுவரி அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





