ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் பாக்கு நீரிணை கடந்து சாதனைப்படைத்துள்ளார்கள்

 


தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக்கு நீரிணை கடற்பகுதியை, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் இருபுறமும் நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ அஷ்வத், இரட்டையர்களான லவ் மற்றும் குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருந்தாலும், முறையான நீச்சல் பயிற்சி பெற்று ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் இந்தச் சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் முறையான அனுமதியைப் பெற்று,  சனிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையிலிருந்து இவர்களது நீச்சல் பயணம் தொடங்கியுள்ளது.

ஜெல்லி மீன்கள் மற்றும் பாறைகள் நிறைந்த ஆழம் குறைந்த சவாலான கடல் பகுதியில், நால்வரும் 'ரிலே' முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நீந்தியுள்ளனர்.

சுமார் 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்களில் கடந்த இவர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் இலங்கையின் தலைமன்னார் பகுதியை வந்தடைந்தனர்.

அதனைதொடர்ந்து, எவ்வித இடைவேளையுமின்றித் தலைமன்னாரிலிருந்து மீண்டும் தனுஷ்கோடியை நோக்கி நீந்தத் தொடங்கிய சிறுவர்கள், காலை 9.27 மணியளவில் அரிச்சல் முனையை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர்.

 மொத்தம் 34 கடல் மைல் தொலைவை 18 மணி 02 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ள இந்தச் சிறுவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களாலும் இத்தகைய கடினமான இலக்குகளை அடைய முடியும் என்பதைத் தங்களது விடாமுயற்சியால் நிரூபித்துள்ளனர்.

ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று, மீண்டும் தொடங்கிய இடத்திற்கே இடைவிடாமல் நீந்தி வந்த இந்த அபூர்வ சாதனையைப் படைத்த சிறுவர்களுக்குத் தனுஷ்கோடி கடற்கரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.