இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை நாடுகடத்த ஏற்பாடு.

 


இலங்கையில் விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதில் 47 சீன நாட்டவர்களும், இரண்டு மலேசியர்களும் மற்றும் ஒரு இந்திய நாட்டவரும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வணிக விசா மூலம் நாட்டிற்குள் வருகை தந்த இவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அதன் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் நீர்கொழும்பு பகுதியில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.