சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது.

 






 





சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வரை இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வியட்நாமின் பன்னகார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினால் நேற்று (22) தம்புள்ளை புனித நகரிலிருந்து இந்த நடைப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜய ஸ்ரீ மகா போதியின் புனித போதி மரக்கன்றினை ஏந்திச் செல்லும் இந்த ஆன்மீக ஊர்வலம், பிரதான நகரங்களினூடாகப் பயணித்து ஒற்றுமை, கருணை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணத்தின் தொடர்ச்சியாகவே இது இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது.

அரச அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைப்பயணம் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இதற்காக வியட்நாமின் பன்னகார தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இந்த நடைப்பயணத்தில் பிக்குகளுடன் இணைந்து "ஆலோகா" (Aloka) எனும் பெயருடைய நாய்யொன்றும் பயணிப்பது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினரைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதையோரங்களில் திரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தேரர்களின் பயணத்தை இலகுவாக்கும் வகையில் வீதியெங்கும் வாழை இலைகளை விரித்து வைத்ததோடு வெயிலினால் சூடாகியிருந்த பாதையைக் குளிர்விப்பதற்காக மக்கள் வீதிகளில் குளிர்ந்த நீரைத் தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.