காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாக மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மண்முணை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரை உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பூஜை பொருட்களையும் மீட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி வழக்கு தாக்கல் செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அவர்களை முன்னிலைபடுத்தியுள்ளனர்.
அதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் பொலன்னறுவைச் சேர்ந்தவர் எனவும் இவர் 3 தலைமுறையாக முதல் ஆண்பிள்ளை எனவும் 3 நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறந்தவர் எனவும் இவரை பலிகொடுத்து புதையல் தோண்டுவதற்கு அழைத்துவரப்பட்டாகவும் சிறுவன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புதையல் தோண்டுவதில் ஈடுபட்டவர்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சிறுவன் புதையல் நிலத்தில் எங்கு இருக்கின்றது என சரியாக மை போட்டு பார்க்கும் திறண் கொண்ட மந்திரவாதி என வாதங்களை முன்வைத்ததையடுத்து நீதவான், சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் ஏனையவர்களை கடந்த 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றில் வெள்ளிக்கிழமை 10 ம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டதையடுத்து தொடரந்து சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் ஏனையவர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 வரை விளக்கமறயலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.





