நாட்டில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களுக்கு கடுமையான சுமையாக மாறியுள்ள நிலையில், சனிக்கிழமையை அதிகாப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் விலைகள், குறிப்பாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் மருத்துவர்களை தீவிரமாக பாதித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மருத்துவ நிபுணர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல தினசரி பலமுறை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதனால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அது சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு சில பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் போல, மருத்துவ நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்கான போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமை மருத்துவர்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வழங்கப்படும் நிபுணத்துவ மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் சங்கம் சனிக்கிழமையை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்து, வாராந்திர பணிநாட்களை மாற்றியமைத்தல் வேண்டும் என்றும் போக்குவரத்து செலவுகளுக்கான நியாயமான இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் பணிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு நிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.





