நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது மூடப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான புரன்வளவிளிருந்து திருமலை பிரதான வீதிக்குச் செல்லும் பல்கலைக்கழக வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து தருமாறு மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது "யுத்த காலத்தில் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான புரன்வளவிலிருந்து திருமலை பிரதான வீதிக்குச் செல்லும் பல்கலைக்கழக வீதியானது (தூரம் 307.41m) மக்கள் பாவனைக்காக இதுவரை திறந்துவிடவில்லை.
இந்த வீதியைத் திறந்து விடுமாறு கோரி பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் பொது மக்கள் சார்பாக கிராம அபிவிருத்தி சங்கம் சமய அமைப்புக்கள் போன்ற சமூக அமைப்புக்கள் மூலம் 1994.05.14, 1996.06.30, 1998.03.15, 2001.01.05 2005.04.23, 2006.08.17, 2008.06.21, 2008.08.28, 2010.10.15, 2012.05.16, 2015.09.27. 2016.07.05, 2018.02.24, 2020.0826, 2021.02.13 2023.04.23 மற்றும் 2025.11.17 ஆகிய திகதிய கடிதங்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் எமக்கு நீதி கிடைக்கவில்லை பிரதேச சபையும் திறந்து தருவதற்கான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை இதுவரைக்கும் எவ்வித கடிதங்களும் இவர்களால் எமக்கு வழங்கப்படவில்லை.
மேலும் இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் வினவிய போது பெண்கள் விடுதி அருகில் காணப்படுவதாகவும், வளாகத்திற்கு பாதுகாப்பு இல்லை எனவும் போலியான காரணங்களை சொல்கிறார்கள். பெண்கள் விடுதி பிரதான வீதிக்கு அடுத்த பக்க வளாகத்தில் புகையிரத பாதைக்கு அருகில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வீதியைத் திறப்பதால் பாதுகாப்பில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகும். அத்தோடு பல்கலைக்கழக மதிலோடு இணைந்து குடியிருப்புக்களும் அமைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு இல்லை என குடியிருப்புக்களை அகற்ற முடியுமா? மேலும் இவ்வீதியை ஒருபோதும் திறக்காது மூடிவிடும் நோக்கில் வீதிக்கு குறுக்காக ஒன்றுகூடல் மண்டபம் அமைக்க பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. எனவே ஒருசில அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுய இலாபத்துக்காக திறக்காதிருக்கும் இவ்வீதியை தாங்கள் நேரடியாக தலையிட்டு திறந்து தருமாறு கிராம பொதுமக்கள் தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ந.குகதர்சன்







