மட்டக்களப்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொடுக்கவுள்ள புதிய திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

 

 


 

கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நடைமுறைப்படுத்தும் கிராமிய பொருளாதார மீள் திறன், நிலைத்தன்மை மற்றும் சுபீட்சத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்றிணைந்த கிராமிய நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை, மீள் திறன் கருத்திட்டத்தினை (IRDCRP) மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் இன்று இடம் பெற்றது.

நிகழ்நிலை ஊடாக இடம்பெற்ற குறித்து கலந்துரையாடலில் அனைத்து மாவட்ட செயலகங்களின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

விவசாயிகளின் நன்மைகள் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குறித்த திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.சனீர் அவர்களது ஏற்பாட்டில் நிகழ்நிலை ஊடாக இடம்பெற்றது.

இத்திட்டத்தின் ஊடாக விவசாய அமைப்புகள் வாயிலாக உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதற்கு அரசாங்கம் வழி வகுத்துள்ளதுடன் இத்திட்டம் தொடர்பாக விவசாய அமைப்புகள் தத்தமது பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 10.04.2026 ஆம் திகதிக்கு முன்னர் தமது ஆர்வ வெளிப்பாட்டினை தெரிவிக்க முடியும் என இதன் போது குறிப்பிடப்பட்டது.