நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான
காலநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது
மாணவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்
மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி
சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காலை 10 மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் விளையாட்டு
நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்களுக்கு அடிக்கடி
இடைவேளைகளை வழங்கி அவர்களை நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தங்க
வைப்பது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக விளையாடுவதைத் தவிர்த்து,
மாணவர்களுக்கு அதிகளவில் நீர் மற்றும் உப்புச்சத்து அடங்கிய பானங்களை வழங்க
வேண்டும் என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளாவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரித்து மயக்கம், சோர்வு மற்றும்
தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படக்கூடும் எனவும் மருத்துவ நிபுணர்
எச்சரித்துள்ளார்.
அத்துடன், மாணவர் ஒருவருக்கு மயக்கம்
அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவரை
குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி, தேவைப்படின் அருகிலுள்ள அரச
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர் சன்ன
டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.





