மத்திய கிழக்கில் நிலவும் போர்
பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக
உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக
அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி; போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில்,
சர்வதேச சந்தையில் ஒரு கலன் வானூர்தி எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி,
இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது.
தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு
எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர்
மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என பிரதி
அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விலை
உயர்வு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நிதி நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளதாக அதன் பதில் தலைமை நிர்வாக அதிகாரி
வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வானூர்தி நிறுவனத்தின் இயக்கச்
செலவுகளில் எரிபொருள் மிக முக்கியமான அங்கமாகும். விலை
இருமடங்காகியுள்ளதால் நிதித் திட்டமிடலில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே பழைய
விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதால், அந்தப் பயணிகளிடம் மேலதிக
கட்டணத்தை வசூலிக்க முடியாது. இது நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும்
எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த இழப்புகளை ஈடுகட்ட உலகெங்கிலும் உள்ள வானூர்தி நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில்
வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பகுதிகளுக்கான வானூர்திகள் மட்டுமே
ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுக்கான பயணிகளின் வருகை சீராக உள்ளது.
வருவாயைப் பெருக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கான மேலதிக வானூர்தி சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
சர்வதேச எரிபொருள் நெருக்கடி காணப்பட்ட
போதிலும், இலங்கையின் கடல்சார் துறை மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள்
நிரப்பும் நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கப்பல்களின் வருகை அட்டவணையில் இதுவரை மாற்றங்கள் ஏற்படவில்லை என பிரதி
அமைச்சர் கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.





